உலகம்

பிஜி தீவில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல்

பிடிஐ, ராய்ட்டர்ஸ்

ராணுவப் புரட்சி ஏற்பட்டு 8 ஆண்டுகள் ஆகியுள்ள பிஜி தீவு நாட்டில் நேற்று தேர்தல் நடைபெற்றது. பிஜி தீவு நாட்டில் 1987 - 2006 இடைப்பட்ட ஆண்டுகளில் அமைந்த 4 முறை அரசுகளை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. கடைசியாக 2006-ம் ஆண்டு ராணுவ புரட்சியை நிகழ்த்தி தளபதி வோரேக் பிராங்க் பைனிமராமா ஆட்சியை கைப்பற்றினார்.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜனநாயகப் பாதைக்கு அந்நாடு திரும்புகிறது. 2013-ம் ஆண்டு புதிய அரசியல் சாசன சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 50 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தற்போது நடைபெற்றுள்ளது. மொத்தம் 250 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பைனிமராமா தலைமையிலான ‘பிஜி முதல் கட்சி’ உள்ளிட்ட 7 கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இந்த தேர்தலில் பிஜியில் உள்ள இந்திய வம்சாவளியினருக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9 லட்சம் பேர் வசிக்கும் இத்தீவு நாட்டில் 40 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஜியில், பூர்விக குடிமக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த 2000-ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடைபெற்ற போது, இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த தேர்தலில் இருதரப்புக்கும் இடையே வன்முறை நிகழாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தேர்தல் கண்காணிப்பாளர் முகமது சனீம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எவ்விதமான அசம்பாவிதமும் இன்றி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அனைத்து இடங்களிலும் மக்கள் பொறுமையாக காத்திருந்து வாக்களித்துள்ளனர். வன்முறை ஏதும் நிகழவில்லை. தற்போது வாக்கு எண்ணிக்கையை தொடங்கியுள்ளோம். வியாழக்கிழமை (இன்று) முடிவுகள் அறிவிக்கப்படும்” என்றார்.

ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி ஆண்ட்ரூ கோலேடிநோவ்ஸ்கி தலைமையில் 92 பேர் கொண்ட சர்வதேச நாடுகளின் குழு, தேர்தலை கண்காணித்தது.

          
SCROLL FOR NEXT