உலகம்

ஏமனில் பள்ளி அருகே சவுதி நடத்திய தாக்குதல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

செய்திப்பிரிவு

ஏமனில் பள்ளி அருகே சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் பலியாகினர். இதில் 7 பேர் குழந்தைகள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஏமன் தலைநகர் சனாவில் அல் ரேய்  பள்ளிக்கூடம் அருகேகுண்டு வெடிப்பு நிகழ்ந்தது.  இதில் 13 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் 7 பேர் குழந்தைகள். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த குண்டு வெடிப்பில் பள்ளிக் கூடத்தின் கட்டிங்களும் பாதிக்கப்பட்டன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஹவுத்தி கிளர்ச்சியாளர்களில் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏமன் அரசு - சவுதி படைகள் கூட்டாக இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தலைநகர் சனா, 2014லிருந்து ஹைவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால் அப்பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT