கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் குடியிருப்புகள் மீது ரஷ்யா நேற்று முன்தினம் 700 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பல மணி நேரம் தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது மிகப் பெரியளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்தவில்லை. தற்போது உக்ரைன் மீது மீண்டும் மிகப் பெரியளவிலான தாக்குதலை ரஷ்யா நேற்று முன்தினம் நடத்தியது. உக்ரைன் தலைவர் கீவ் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை நோக்கி 700 ட்ரோன்கள் மற்றும் ஏராளமான ஏவுகணைகளை ரஷ்யா பல மணி நேரம் வீசியது.
காலை முதல் இரவு வரை நடைபெற்ற தொடர் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயம் அடைந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைன் மக்கள் 15,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. வான் பாதுகாப்பு ஆயுதங்களை அதிகளவில் வழங்கக் கோரி ஜெர்மனி மற்றும் நார்வே நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் ரஷ்யா இந்த மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் உள்நாட்டில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. ஆனால், அவை அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளுக்கு நிகராக இல்லை. ஆயுத பற்றாக்குறை மட்டும் அல்லாமல் போர் காரணமாக நிதி நெருக்கடியிலும் உக்ரைன் சிக்கியுள்ளது.
ஐரோப்பிய யூனியன் 90 பில்லியன் யூரோ கடன் அளிப்பதாக உறுதி அளித்திருந்தது. ஆனால் ஹங்கேரி எதிர்ப்பால் இந்தக் கடன் நிலுவையில் உள்ளது. இதை விரைவில் வழங்கும்படி உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் போர் காரணமாக அமெரிக்க ஆயுதங்களின் கையிருப்பு குறைந்து வருவதும், உக்ரைனுக்கு அமெரிக்க ஆயுதங்கள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆயுத உதவி அளிப்பதாக உறுதி அளித்த பல நட்பு நாடுகள் கைவிரித்து விட்டதாக அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.