எப்தில் சுற்றுலா பயணிகள் பேருந்து சென்ற சாலையில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து எகிப்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”எகிப்தில் வியட்நாம் சுற்றுலா பயணிகளின் பேருந்து ஒன்று அல்மாரியோடியா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென குண்டு ஒன்று வெடித்தது.
இதில் அந்த பேருந்தில் பயணித்த பயணிகளில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் பலியானார். அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்” என்று கூறப்பட்டுள்ளது.
எகிப்திலுள்ள புகழ்பெற்ற பிரமிடுகளை காண சுற்றுலா பயணிகள் சென்றபோது இந்த கூண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எகிப்தின் சினாய் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு அரசுப் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இதில் தீவிரவாதிகள் தேவாலயங்கள், வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.