இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பதவி விலகினார். எனினும் ரணில் பிரதமர் பதவியில் தொடர அதிபர் சிறிசேனா விரும்பவில்லை என கூறப்படுகிறது. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ரணிலுக்கு உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளன.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த அக்டோபர் 26-ம் தேதி நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தல் தேதியையும் அறிவித்தார்.
இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக மறுத்தார். மேலும் அதிபர் சிறிசேனாவின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடாளுமன்ற கலைப்பு, பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதித்தது. அதன்பின் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ரணில் தலைமையில் 122 எம்.பி.க்கள் கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த 3-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயல்பட தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜபக்ச மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச சனிக்கிழமை பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ச ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி ராஜபக்ச இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். கடுமையான எதிர்ப்பு மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் வேறு வழியின்றி ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எனினும் பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்கே தொடருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரணிலுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிபர் சிறிசேனா கொண்டிருப்பதால் அவர் பிரதமர் பதவியில் தொடர்வதில் சிக்கல் எழலாம் எனத் தெரிகிறது. இதனை சிறிசேனா ஏற்கெனவே கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கேவை தவிர வேறு ஒருவரை பரிந்துரைத்தால் அவரை பிரதமராக ஏற்கத் தயார் என அவர் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகராக இருக்கும் கரு.ஜெயசூர்யாவை பிரதமர் பதவிக்கு அதிபர் சிறிசேனா முன்னிறுத்துகிறார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில கட்சிகள் ரணிலுக்கு ஆதரவாக இருப்பதால் முடிவெடுப்பதில் இன்னமும் சிக்கல் நீடித்து வருகிறது.