உலகம்

பிரான்ஸில் அவசர நிலை அறிவிப்பு? - பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டம்; வரலாறு காணாத வன்முறை

செய்திப்பிரிவு

பிரான்ஸில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் திரண்டு ‘மஞ்சள் ஜாக்கெட்’ அணிந்து பெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அந்நாடு ஸ்தம்பித்துள்ளது. பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதால் அவசர நிலையை பிரகடனம் செய்வது குறித்து பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு சமீபத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதனால் பெட்ரால் மற்றும் டீசல் விலை அந்நாட்டில் கடுமையாக உயர்ந்தது. பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ என கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.

கடந்த 2000மாவது ஆண்டுக்கு பிறகு பிரான்ஸில் பெட்ரால், டீசல் விலை இந்த அளவு உயர்த்தப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதலை தவிர்க்க எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த நடவடடிக்கை எடுக்கப்படுவதாக பிரான்ஸ் அரசு கூறுகிறது. இதன் காரணாமாகவே,

கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது. இது 2019-ம் ஆண்டு மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக அதிபர் மக்ரோன் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி மின் கட்டணத்தையும் உயர்த்த பிரான்ஸ் அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் போராட்டம் தொடங்கியது.

எரிபொருள் விலை உயர்வால் அன்றாட செலவுகள் அதிகரிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மஞ்சள் ஜாக்கெட் அணிந்து போராட்டத்தை இளைஞர்கள் சிலர் முன்னெடுத்தனர். பிரான்ஸில் வாகன ஓட்டுநரின் யூனிபார்மை குறிக்கும் விதமாக இந்த ஆடையை அணிந்து மக்கள் போராட்டம் நடத்தினர். கார் ஓட்டுநர்கள் ஒருங்கிணைத்த இந்த போராட்டம் பின்னர் மக்கள் போராட்டமாக மாறியது

பேஸ்புக், ட்விட்டர் வழியாக பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு எதிராக தொடர் பிரசாரங்கள் நடந்தன. ஆங்காங்கே இளைஞர்கள் கூடி பிரான்ஸ் அதிபரை கண்டித்து போரட்டம் நடத்தி வந்தனர்.

சனிக்கிழமை  அன்று பிரான்ஸ் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஆயிரக்கணககான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ‘மஞ்சள் ஜாக்கெட்’ போராட்டத்தால் பிரான்ஸ் ஸ்தம்பித்து போனது. 

போராட்டம் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞர்கள் பாரீஸ் தெருக்களில் இறங்கி வாகனங்களையும் சேதப்படுத்தினர். வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளதால் நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பாக அதிபர் இமானுவேல் மக்ரோன் உள்துறை அமைச்சருடன் ஆலோசனையை நடத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT