வியட்நாமில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலியாகினர். பலர் மாயமாகி உள்ளனர்.
இதுகுறித்து வியட்நாம் அதிகாரிகள் தரப்பில், ''வியட்நாமில் கடந்த சில வாரமாக கடுமையான ம்ழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாகப் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரிசார்ட் நகரமான நா தாராங் நகரில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவுக்கு 13 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தான பகுதிகளில் நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட மக்களை மீட்க 600க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மீட்புப் பணி முடிவடைந்து இயல்பு நிலை திரும்பும் என்றும், மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் புயல் காரணமாக வியட்நாமில் ஏற்படும் நிலச்சரிவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகி வருகின்றனர்.