மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பள்ளிக்கூடத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கேமரூன் அரசுத் தரப்பில், ”கேமரூனில் பமிண்டா பகுதியில் பள்ளி ஒன்றில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 80க்கும் மேற்பட்டோர் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளால் திங்கட்கிழமை கடத்தப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது கடத்தப்பட்ட 77 பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கேமரூனில் பிரிவினைவாதிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே அந்நாட்டு அரசுக்கு எதிராக தீவிரவாதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தக் கடத்தலில் பிரிவினைவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.