உலகம்

ஜமால் கொலை:  சவுதி அளித்த புதிய விளக்கம்

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிகையாளர் ஜமாலின் கொலை குறித்து புதிய விளக்கத்தை சவுதி அளித்துள்ளது.

இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபிர்,  ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் கூறும்போது, ”ஜமால் மோசமான முறையில் கொல்லப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு. அவர் மரணத்துக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்தான்  உத்தரவிட்டார் என்பதை நான் மறுக்கிறேன்.

எங்களுடைய மூத்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஜமாலின் கொலை குறித்து தெரியாது.  ஜமாலின் உடல் எங்கு இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஜமாலின் கொலை தொடர்பாக நாங்கள் அனைத்து உண்மைகளையும் கண்டறிந்து குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய தீர்மானமாக இருக்கிறோம்” என்றார்.

இந்த நிலையில் ஜமாலின் உடலை இஸ்தான்புல்லிலுள்ள பெல்கிரேட் வனப் பகுதியின் அருகே  தேடும் பணியை துருக்கி அரசு மிக தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. ஜமாலின் உடல் இவ்வனப் பகுதியில் இருக்க வாய்ப்பிருப்பதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்களுக்கு எதிரான எந்த வன்முறைத் தாக்குதலையும்  நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.  ஜமால் வழக்கில் நாங்கள் நம்பகத்தன்மையின் அடிப்படையில் எங்கள் முடிவை எடுப்போம் என்று பிரிட்டன், பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் சவுதியை எச்சரித்துள்ளன.

யார் இந்த ஜமால்?

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்ட்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில் இம்மாத தொடக்கத்தில் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமாலின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி சமீபத்தில் குற்றம் சாட்டியது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் சவுதிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

SCROLL FOR NEXT