சாமானிய மனிதர்களை நட்சத்திரங்களாக்கும் வாய்ப்பை சமூக வலைதளங்கள் எளிமையாக்கியுள்ளன. அதற்கு மற்றுமொரு உதாரணமாகி இருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப்.
பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிஃப் என்ற பெயிண்டர் வீட்டின் கட்டிடப் பணியின்போது ஹிந்தி பாடல் பாடும் வீடியோவை, அக்பர் ட்வீஸ் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. சன்னமரியா, ஆஷிகி ஆகிய பாடல்களை நல்ல தேர்ந்த பாடகர் போலப் பாடுகிறார் ஆரிஃப்.
சுமார் 30 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்கள் இந்த வீடியோவை இதுவரை பார்க்கப்பட்டுள்ளது. 60,000க்கும் அதிகமானவர்கள் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். மேலும் முகமது ஆரிஃபின் குரல் வளத்தால் ஈர்க்கப்பட்ட நெட்டிசன்கள் பலர், அந்நாட்டு இசையமைப்பாளர்களின் சமூக வலைதளப் பக்கங்களை குறிப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் சிலரது பதிவுகள், “உயிரோட்டமான குரல், எனது கண்களில் நீர் வருகிறது. அவரது குரலை கேட்டுக் கொண்டே இருக்கலாம். இவர் நிச்சயம் பிரபலமாவதற்கு தகுதியானவர்” என் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் "இயற்கையான குரல். நிச்சயம் இவருக்கு இசையமைப்பாளர் ஒருவர் வாய்ப்பளிக்க வேண்டும். வாழ்த்துகள் முகமத் ஆரிஃப் "என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இதே போன்று இந்தியாவில் கேரள இளைஞர் ராகேஷ் உன்னி 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் பாடிய உன்னைக் காணாத பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இதனைத் தொடர்ந்து பாடகரும், இசையமைப்பாளருமான ஷங்கர் மகாதேவன் அவருக்கு வாய்ப்பு வழங்குவதாக அறிவித்தார்.