உலகம்

வடகொரியா செல்ல வேண்டாம்: வெளியுறவு அமைச்சருக்கு ட்ரம்ப் திடீர் உத்தரவு

செய்திப்பிரிவு

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாப்பியோவின் வடகொரியா பயணத்தை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெளியுறவுத் துறை அமைச்சரின் வடகொரிய பயணத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். அணு ஆயுத சோதனைகளை  நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையில் வடகொரியாவுடன் போதுமான அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இவ்விகாரத்தில் மேலும் சீனா - வடகொரியாவுக்கு மறைமுகமாக உதவுவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே மிகவும் கடுமையான  வார்த்தை மோதல் நடந்தது.

இரு நாடுகளும் தங்கள் ராணுவ பலம் மற்று அணு ஆயுத பலத்தை ஒப்பிட்டு வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். மேலும் அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து ராணுவப் பயிற்சியில் கடந்த ஆண்டு ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. அத்துடன் வடகொரியா மீது ஐநா சபை  பொருளாதாரத் தடை விதித்தது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ட்ரம்பும் - கிம்மும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் கேபெல்லா ஹோட்டலில்  ஜூன் 12 ஆம் தேதி சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பிய ட்ரம்ப் வடகொரியாவிடமிருந்து அணு ஆயுதங்கள் குறித்த எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று பதிவிட்டுருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT