கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ”கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் சுற்றுலா பகுதிகளில் திங்கட்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தக் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில் இளைஞர்களும் குழந்தைகளும் அடங்குவர்.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கீரிஸ் அரசு அச்சம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், சுற்றுலா விடுதிகள், வாகனங்கள் இந்தத் காட்டு தீக்கு இரையாகியுள்ளன. சுமார் 715 மக்கள் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்” என்று வெளியிட்டுள்ளது.
இந்த தீ விபத்து குறித்து கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் பத்திரிகையாளரிடம் கூறும்போது, "நாங்கள் காட்டுத் தீயை அணைக்க எல்லா வகையிலும் முயற்சித்து வருகிறோம். ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தண்ணீர் தொடர்ந்து தெளிக்கப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது” என்றார்.
கிரீஸில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான காட்டு தீயாக இது கருதப்படுகிறது.