ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், ''ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் உள்ள பாதுகாப்புப் படையினர் வாகனத்தில் வெடிகுண்டை உடம்பில் கட்டி வந்த தீவிரவாதி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததில் 10 பேர் பலியாகினர். இறந்தவர்களில் 8 பேர் பொதுமக்கள். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குண்டுவெடிப்பை நேரில் பார்த்த இஸ்மத்துல்லா ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "ஒரு பெரிய நெருப்புப் பந்து எழுந்தது. மக்கள் அனைவரும் தூக்கி எறியப்பட்டார்கள்” என்றார்.
இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.