கனடாவில் டோராண்டோ நகரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.13 காயமடைந்தனர்.
இதுகுறித்து கனடா போலீஸார் தரப்பில், "டோராண்டோவிலுள்ள கிரிக்டவுனில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானார். 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு இளம்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் போலீஸாருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.
துப்பாகிச் சூடு நடத்திய நபர் கிரிக்டவுனிலுள்ள கஃபே ஷாப்களையும், உணவகங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. எனினும் இதனைப் பற்றி உறுதியான தகவல் இல்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் டோராண்டோ போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் டோராண்டோ வாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.