ஜிம்பாப்வே நாட்டில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறையில் எந்த வன்முறையும் இல்லாமல் பொதுத் தேர்தல் அமைதியாக நடந்து வருகிறது.
ஜிம்பாப்வே நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிமுதல் மக்கள் வாக்கு சாவடிகளில் வரிசையாக நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
சுமார் 70 - 80 சதவீத வாக்குகள் தற்போதுவரை பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன..
இந்தத் தேர்தலில் தற்போது ஜிம்பாப்வே அதிபராக இருக்கும் எம்மர்சனுக்கும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான 40 வயதான நெசன் சாமிசாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவு இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வேக்கு 1980-ல் சுதந்திரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு (இசட்.ஏ.என்.யு) கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது.
சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
கடந்த வருடம் நவம்பர் 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் முகாபே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் ஜனு பி.எப். கட்சித் தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர்.
தொடர்ந்து முகாபேவுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் அதிகரிக்க, அதிபர் பதவியை முகாபே கடந்த வருடம் இறுதியில் ராஜினாமா செய்தார்.