உலகம்

துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்து: 24 பேர் பலி; காயம் 318

ஏஎஃப்பி

துருக்கியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர். 318 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், "துருக்கியில் பெய்து வரும் கனமழையினால் இஸ்தான்புல்லிலிருந்து எட்ரின் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் அதில் பயணம் செய்த 24 பேர் பலியாகினர். 318 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ரஷ்யாவைச் சேர்ந்தவர்களும் காயமடைந்துள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபத்து ஏற்பட்டதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை. எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று துருக்கி ரயில்வே அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் துருக்கியில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது என்று துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT