கோப்புப்படம் 
உலகம்

சிகரெட்டை போலவே ஸ்மார்ட்போனிலும் விரைவில் ஹெல்த் எச்சரிக்கை வாசகம்: ஸ்பெயின் முயற்சி

செய்திப்பிரிவு

மாட்ரிட்: ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன் வேடிக்கையான விஷயம் அல்ல. அதனை உணர்ந்த ஸ்பெயின், தேசத்தில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு போனிலும் ஹெல்த் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெற செய்ய முடிவு செய்துள்ளது. அரசுக் குழுவின் பரிந்துரைப்படி விரைவில் இந்த வாசகம் போன்களில் இடம்பெறும் என தகவல்.

ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன் மனநலன், உடல்நலன், தூக்கம், உறவு முறை என அனைத்தையும் வயது வித்தியாசமின்றி பாழ்படுத்துகிறது. இதை கருத்தில் எடுத்து கொண்ட ஐரோப்பிய தேசமான ஸ்பெயின் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. அதாவது சிகரெட்டை போலவே ஸ்மார்ட்போனிலும் ஹெல்த் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெற செய்ய முடிவு செய்துள்ளது.

இது ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன் மற்றும் ஸ்க்ரீன்டைமை குறைப்பது போன்ற விழிப்புணர்வை ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் ஏற்படுத்தும் என ஸ்பெயின் நம்புகிறது. ஸ்பெயின் அரசு நியமித்த வல்லுநர் குழு தாக்கல் செய்துள்ள 250 பக்க ஆய்வறிக்கையில் இது முன்மொழியப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் சாதனங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது சார்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக அளவில் சிகரெட் பிடிப்பதால் கோடிக் கணக்கிலான மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அந்தப் பொருட்களில் படங்கள் மற்றும் வாசகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன. அதே ரூட்டினை ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன் சார்ந்தும் ஸ்பெயின் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT