இஸ்ரேல் நாட்டின் இரண்டு ஏவுகணைகள் டமாஸ்கஸ்ஸில் உள்ள விமான நிலையத்தில் அருகில் தாக்கியதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், "இரண்டு ஏவுகணைகள் இஸ்ரேலிருந்து டமாஸ்கஸிலுள்ள சர்வதேச விமான நிலையம் அருகில் விழுந்தன. மேலும் இரானின் கார்கோ விமானத்தை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறியுள்ளது.
ஆனால் இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறி இருக்கிறார்.
இஸ்ரேல் - ஈரான் மோதல்
சிரிய எல்லையில் ஈரானிய ராணுவம் நிலைத்திருத்தப்படுவது அதிகரித்து வருவது தங்களது நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது என்று இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது. இதற்கு முன்னரும் சிரியாவில் ஈரானின் ராணுவ நிலைகளை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் காரணமாக கடந்த இரு மாதங்களாகவே ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இஸ்ரேல்தாக்குதல்களில் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் இறந்ததாக அந்நாடு குற்றம் சாட்டியிருந்தது.
இந்த நிலையில் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் இரு நாடுகளுக்கிடையே மேலும் மோதலை அதிகப்படுத்தியுள்ளது.