உலகம்

தாய்லாந்து பிரதமராக ராணுவத் தளபதி பதவியேற்பு

செய்திப்பிரிவு

தாய்லாந்து ராணுவத் தளபதி ப்ரயுத் சான்-ஓசா அந்த நாட்டின் 29-வது பிரதமராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தாய்லாந்தில் அரசுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து ராணுவம் தலையிட்டது. கடந்த மே 22-ம் தேதி பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை தூக்கியெறிந்துவிட்டு ராணுவத் தளபதி ப்ரயுத் சான்-ஓசா ஆட்சி யைக் கைப்பற்றினார்.

ராணுவ ஆட்சியைக் கலைத்து விட்டு உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் 2015 அக்டோபர் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்று ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

இந்நிலையில் நாட்டின் 29-வது பிரதமராக ராணுவத் தளபதி ப்ரயுத் சான்-ஓசா திங்கள்கிழமை முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். முதுமை காரணமாக பதவியேற்பு விழாவில் மன்னர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரது சார்பில் வாழ்த்து கடிதம் வாசிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT