அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், "பரம்ஜித் சிங் (44) என்ற அமெரிக்க வாழ் இந்தியர் மீது பர்னெட் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செவ்வாய்க்கிழமையன்று நிக்கோல்சன் என்ற நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
பரம்ஜித் சிங்கை துப்பாக்கியால் சுட்ட அடுத்த 10 நிமிடத்தல் அந்த நபர் மற்றொரு கடைக்குள் நுழைந்து அந்தக் கடையில் பணியாற்றிய பார்திவ் பட்டேல் என்பவரை சுட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பரம்ஜித் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பார்திவ் பட்டேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் கடைகளிலிருந்து பொருட்களையோ, பணத்தையோ எடுக்கவில்லை" என்று கூறியுள்ளனர்.
நிக்கோல்சனை ஜார்ஜியா மாகாண போலீஸார் கைது செய்து துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.