உலகம்

7 வயது சிறுமி பலாத்காரம், கொலை: எதிர்ப்பை பதிவு செய்ய மகளுடன் செய்தி வாசித்த பெண் பத்திரிகையாளர்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு முறை சிறுமி பாலியல் பலாத்கார செய்தியை கேட்கும்போதும், வாசிக்கும்போது மகளைப் பெற்ற தாய்கள் அனைவருமே உள்ளுக்குள் அழாமல் இருப்பதில்லை. மவுனமான அழுகையுடன் அது முடிந்துபோய்விடும்.

ஆனால், பாகிஸ்தானில் 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு தாயை வெகுவாக பாதித்திருக்கிறது. பத்திரிகையாளராக பணி புரியும் அந்தத் தாய் செய்தி வாசிக்கும்போது தனது சின்னச்சிறு மகளை மடியில் அமரவைத்துபடியே செய்தியை வாசித்தார்.

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.

பாகிஸ்தானின் சமா டிவியைச் சேர்ந்தவர் கிரண் நாஸ். அன்றைய தினத்தின் செய்தியை அவர் வாசிக்கத் தொடங்கியபோது, "நான் இன்று வெறும் கிரண் நாஸ் இல்லை. நான் ஒரு தாய். 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டிருக்கிறார். இது மனிதநேயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட கொலை. இது இந்த அரசாங்கத்தின் இயலாமையை உணர்த்துகிறது" என்று கூறினார்.

இந்த சம்பவம், செய்தியைப் பார்த்த பலரையும் நெகிழச்செய்தது.

நடந்தது என்ன?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கிறது கசூர் மாவட்டம். அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி கடந்த ஜனவரி 5-ம் தேதி குரான் வகுப்புக்காக சென்றிருந்தார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. அவர் கடத்தப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின் அவர் சடலமாக மீட்கப்பட்டார். அவர் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு பின்னணியில் சீரியல் கொலைகாரன் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அம்மாவட்டத்தில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீதி கேட்டு மக்கள் தொடர்ந்து தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க போலீஸ் தடியடி நடத்தியும் இன்னும் அங்கு போராட்டங்கள் ஓயவில்லை. போலீஸாரின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

சிறுமியின் தந்தை முகமது அமின் கூறும்போது, "போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வேகத்தை எனது மகளை மீட்பதில் காட்டியிருந்தால் அவள் உயிருடன் இருந்திருப்பாள்" என வேதனை தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சிறுமி பலாத்கார, கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை கண்டுபிடிக்கும் போலீஸாருக்கு ராணுவமும், ஐஎஸ்ஐ அமைப்பும் உதவுமாறு பாகிஸ்தான் ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் 11 குழந்தைகள்..

பஞ்சாப் மாகாணத்திலிருந்து இயங்கும் சாஹில் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமானது, பஞ்சாப் மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் 18 வயதுக்குட்ட குழந்தைகள் 11-க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 4,139 சம்பவங்கள் நடந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT