காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 100 பேர் உயிரிந்துள்ளனர். மேலும், 350-க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர். கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேரில் 20 பேர் தப்பியதாகவும், மற்ற 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேபாளத்தின் வடக்கு எல்லையான ரசுவா மாவட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் பனிமலைகள் உடைப்பு காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மலைச்சரிவுகளில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்ளநீர் கிராமங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய நீர்மின் திட்டங்களை அடித்துச் சென்று பேரழிவை ஏற்படுத்தியது. ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள் நொடிப் பொழுதில் வெள்ளத்தில் சரிந்து விழுந்தன. பெரும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதுதொடர்பான ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 350-க்கும் மேற்பட்டவர்களை தேடி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வெள்ளத்தில் 9 பாதுகாப்புப் படையினர் மற்றும் 60 நீர்மின் நிலைய தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
நேபாள சுற்றுலா வாரியத்தின்படி, 291 வெளிநாட்டவர்கள் (105 இந்தியர்கள் உட்பட) மற்றும் 93 நேபாளிகள் என மொத்தம் 384 பயணிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
ராசுவாகதி, சிலிமே, திரிசூலி நீர்மின் நிலையங்கள் உட்பட 6 முக்கிய மின் உற்பத்தி மற்றும் பரிமாற்ற நிலையங்கள் வெள்ளத்தில் சேதமடைந்ததால் நேபாளத்தில் மின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டதே பெருவெள்ளத்துக்குக் காரணம் என்று நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் சிஷிர் கனால் நேற்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி உறுதி
நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவிடம் தொலைபேசியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொண்டார். அத்துடன், தேவையான அனைத்து மனிதாபிமான மற்றும் மீட்பு உதவிகளையும் இந்தியா வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.
அதன்படி, நேபாளத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட இந்திய விமானப் படையின் சி-17 மற்றும் சி-130 விமானங்கள் நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மண் தோண்டும் இயந்திரங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் நேபாளத்துக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. தொலைபேசி / வாட்ஸ்அப்: +977 985 131 6807 | +977 970 910 7500 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு விவரங்கள், உதவிகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்திரைக்குச் சென்றனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களைக் கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறுவனம் அழைத்துச் சென்றுள்ளது.
இவர்கள் நேற்று காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் ஒரு வாகனத்தில் சென்ற 20 பேர் தப்பி பத்திரமாக உள்ளதாகவும், மற்ற 2 வாகனங்களில் சென்ற 37 பேர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, பின்னர் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் உரிமையாளர் செய்யது சாதிக் (76) கூறியதாவது:
கடந்த 23-ம் தேதி இரவு கைலாய மலைக்குக் கும்பகோணத்தில் இருந்து 57 பயணிகளுடன் புறப்பட்டோம். பின்னர் காத்மாண்டுவில் இறங்கி கைலாய மலைக்கு அவர்களை 3 வாகனங்களில் அனுப்பி வைத்துவிட்டு நான் திரும்பி விட்டேன். எனது மகன் உமர் பாரூக் (30) அவர்களுடன் வழிகாட்டியாகச் சென்றார்.
பின்னர், இன்று (நேற்று) காலை எங்களது குழுவில் சென்ற ரகு என்பவர் எனக்கு போன் செய்து, திடீர் வெள்ளத்தில் ஒரு வாகனத்தில் சென்ற 20 பேர் தப்பித்து பத்திரமாக உள்ளதாகவும், 37 பேருடன் சென்ற 2 வாகனங்கள் பள்ளத்தில் விழுந்ததை பார்த்ததாகவும் கூறினார்.
பின்னர், அந்த 37 பேரும் தங்களது உடைமைகளை இழந்து ராணுவ முகாமில் இருப்பதாக குழுவில் சென்ற சிவரஞ்சனி என்பவர் காலை 10 மணியளவில் எனக்கு தகவல் தெரிவித்தார். அந்தப் பகுதியில் தொலைதொடர்பு வசதி இல்லாததால் அதன்பின் அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களாகத் தொடர்பு கொண்டால் மட்டுமே பேச முடியும். அனைவரும் பத்திரமாக ஊர் வந்து சேருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு செய்யது சாதிக் கூறினார்.
நேபாள வெள்ளத்தில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியான மயிலாடுதுறையைச் சேர்ந்த வி.சிவஞானமும் சிக்கியிருப்பதாகவும், அவர் உள்ளிட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்க மீட்புப் படையினர் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.