இன்று என்ன நாள்

மார்ச் 01: இன்று என்ன? - பத்திரிகை உலகின் ஜாம்பவான் ஏஎன்எஸ்

செய்திப்பிரிவு

கேரள மாநிலம் கொச்சியில் 1904 மார்ச் 1-ம் தேதி ஏ.என்.சிவராமன் பிறந்தார். இவரை வாஞ்சையுடன் ஏஎன்எஸ் என்று எல்லோரும் அழைப்பார்கள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னணி பத்திரிகையாளரான டி.எஸ்.சொக்கலிங்கத்தின் நட்பு கிடைத்தது.

காந்திஜியின் ‘ஹரிஜன்’ நாளிதழின் தமிழ் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். ‘தினமணி’ நாளிதழில் 44 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். ‘கணக்கன்’, ‘ஒண்ணேகால் ஏக்கர் பேர்வழி’, ‘குமாஸ்தா’, ‘அரைகுறை வேதியன்’, ‘அரைகுறை பாமரன்’ ஆகிய புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.

இவரது கட்டுரைகள், பத்திரிகை தலையங்கங்களை வைத்து பலர் முனைவர் பட்டம் பெற்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட 17 மொழிகள் அறிந்தவர். 93-வது வயதில் அரபி மொழி கற்றார்.

நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெறும் வாய்ப்பு தேடிவந்தபோதும் ஏற்க மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு வழங்கிய தாமிர பட்டயத்தை ஏற்றார்.

SCROLL FOR NEXT