சிறப்பு கட்டுரைகள்

வீழ்ந்தாலும் எழுவோம்

செய்திப்பிரிவு

மனிதனுக்கு வெற்றியை விட தோல்விகளே அவனை மறுசீராய்வு செய்வதற்கு பெரிதும் உதவும். வெற்றி பெற்ற மனிதனை விட தோல்வியுற்ற மனிதனே அடுத்த இலக்கினை நோக்கி வேகமாக நகர்வான். வெற்றி என்ற உணர்வு தரும் இன்பம் மிஞ்சிப்போனால் ஒரு மாத காலம் வரை நம் மனதில் நிலைத்து இருக்கும். ஆனால் தோல்வி தரும் வலிகள் ஒரு மாதம் அல்ல ஒரு வருடம் வரையிலும் ஏன் நமக்கான இலக்கை நாம் அடையும் வரையிலும் நம் கூடவே பயணிக்கும்.

சிலர் இந்த தோல்விகளினால் துவண்டு போவதும் உண்டு. சிலர் இந்த தோல்விகளையே தோளில் சுமந்து கொண்டு வாழ்க்கையில் பல சாதனைகளை சாதிப்பதும் உண்டு. ஆனால், நம்மில் பலர் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தினிலே அவர்களுக்கு பரீட்சையமான செயலை செய்யக்கூட தயங்குவார்கள். இத்தகையோர் என்றும்பார்வையாளர்களே! அவர்களுக்கு வெற்றி, தோல்வி என்றஎந்த அனுபவமும் கிடைக்கப் போவதில்லை.

எனவே, நாம் தோற்றுவிட்டோம் நமக்கு இது சரிபடாது என்றுவிலகிக் கொள்ளாமல், எந்தெந்த காரியங்களினால் நாம் தோற்றோம், எந்த இடத்தில் என்ன தவறவிட்டோம் என்று நம்மை நாமே தகவமைத்துக் கொண்டு சரியான திட்டமிடலோடு இலக்கினை நோக்கி பயணிக்க வேண்டும். நூறு முறை வெற்றி பெற்றவனிடம் சென்று அவனது அனுபவத்தைக் கேட்டால் அவன் வெற்றி பெற்ற ஒரே ஒரு காரணத்தை மட்டுமே கூறுவான்.

ஆனால் நூறு முறை தோல்வி அடைந்தவனிடம் சென்று அவனது அனுபவத்தை கேட்டால் நூறு முறை தோல்வி அடைந்த காரணங்களை கூறுவான். ஏனென்றால் ஒவ்வொரு முறை தோல்வியுற்ற பிறகும் அவன் வெற்றி பெறுவதற்கு புதுமையான யுக்திகளை தான் கையாண்டு இருப்பான். எனவே, முயல்வோம் உயர்வோம். - அ.சுல்தானா அறிவியல் ஆசிரியர், எஸ்.ஆர்.வி.சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி

SCROLL FOR NEXT