தொடுதிரை டிஜிட்டல் பலகைகள், நவீனக் கணினி ஆய்வகம், 24 மணி நேர மின் வசதி, சுத்தமான, வண்ணமயமான வகுப்பறைகள் இவை ஓர் உயர்தரத் தனியார் பள்ளியின் சிறப்பம்சங்களாகத் தோன்றலாம். உண்மையில், மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் உள்ள ஒரு மராத்தி வழித் தொடக்கப் பள்ளி தற்போது எட்டியிருக்கும் உயர்நிலை இது.
அதைவிட முக்கியமாக, பல கிராமப்புற, புறநகர்ப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை இன்றி தத்தளிக்கும்போது, இந்தப் பள்ளி 100 சதவீத மாணவர் சேர்க்கையை எட்டியுள்ளது.
தரம்வாய்ந்த கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதிகளால் ஈர்க்கப்பட்டு, கிராமத்தில் உள்ள பள்ளி செல்லும் வயதுடைய அனைத்துக் குழந்தைகளும் இங்கு சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மாற்றத்துக்கு அரசாங்கத்தின் நிதி உதவவில்லை; மாறாக ஆசிரியர்களின் உறுதியும், கிராம மக்களின் நிதிப் பங்களிப்புமே காரணம்.
இந்தப் பள்ளியில் கடந்த வாரம் சுதந்திர நாளன்று, ரூ.1.75 லட்சம் மதிப்பில் உயர் தொழில்நுட்பம் கொண்ட உரையாடும் தொடுதிரை டிஜிட்டல் பலகைக்கான திறப்பு விழா நடைபெற்றது.
இந்தப் பலகை முழுமையாகக் கிராம மக்களின் நன்கொடை கொண்டு வாங்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்டப் பஞ்சாயத்துத் துணை வேளாண் அலுவலர் நாராயண் பிம்பிள், “கிராம மக்கள், ஆசிரியர்களின் கூட்டு முயற்சி யால்தான் இந்த மாற்றம் சாத்தியமானது” என்றார்.
பாடங்களை ஈர்க்கக்கூடியதாகவும் காட்சி பூர்வமாகவும் இந்த டிஜிட்டல் பலகை மாற்றியுள்ளதாகவும், கணினி ஆய்வகம் மாணவர் களுக்கு நடைமுறை டிஜிட்டல் கல்வி அறிவை வழங்குவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக் கின்றனர்.
தொடக்கப் பிரிவில் தற்போது 75 மாணவர்கள் உள்ளனர், அரசு விதிமுறைகளின்படி மூன்று அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் இங்கு கற்பிக்கின்றனர்.