வினைதீர்த்தநாடார்பட்டி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், அப்பள்ளியின் மாணவி ஆராதனா இணைந்து அடிக்கல் நாட்டினர். 
நம்ம ஊரு நடப்பு

தென்காசி அருகே அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறைகள்: முதல்வருக்கு மனு அனுப்பிய மாணவியே அடிக்கல் நாட்டினார்

செய்திப்பிரிவு

தென்காசி: தான் படிக்கும் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை அனுப்பிய மாணவியே புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே வினைதீர்த்தநாடார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆராதனா. இவர், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித் தர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.

அம்மாணவியின் கோரிக்கையை ஏற்று ரூ.35.50 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டப்படும் என கடந்த மாதம் தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து, அப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.35.5 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், வினைதீர்த்தநாடார்பட்டி அரசு பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், முதல்வருக்கு கோரிக்கை வைத்து நிதி கிடைக்க காரணமாக இருந்த மாணவி ஆராதனாவுடன் இணைந்து அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றியக்குழு தலைவர் காவேரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சாக்ரடீஸ், திப்பணம்பட்டி ஊராட்சித் தலைவர் ஐவராஜா, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT