திண்டுக்கலில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். திண்டுக்கல் தக்ஷிலா வித்யா மந்திர் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு 14, 17, 19 வயதினருக்கான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தாளாளர் ராமநாதன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் அனுசித்ரா முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் இருந்து 190 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் தனித் திறமை, இருவர் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றன.
மேலும், சுருள் சுற்றுதல் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியை சிலம்பாட்டக் கழக மாவட்டத் தலைவர் ஜி.சுந்தரராஜன் தொடங்கி வைத்தார். வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய சிலம்பாட்டக் கழக துணை தலைவர் மோகன், பள்ளி நிர்வாக அலுவலர் டேவிட் ஆகியோர் செய்திருந்தனர்.