வெற்றிக் கொடி

மகிழ்ச்சியே கல்வியின் அடையாளம்

அ.கிரேஸி மேரி

புதிய கல்வியாண்டில், வண்ணமயமான பூக்களால் வகுப்பறைகள் பூத்துக் குலுங்கத் தொடங்கிவிட்டன. பாடப் பகுதியை நடத்தும் முன்னர், “உங்களிடம் ஒரு கேள்வி?” என்று தொடங்கியது வகுப்பு.

ஆர்வத்தோடு அனைவரும் கேட்டனர். வழக்கமான கேள்விகளைத் தவிர்க்க நினைத் தேன். வீட்டில் உங்களது பெற்றோரிடம் உங்களுக்கு முரணான விஷயம் ஏதேனும் இருந்தால் கூறுங்களேன் என்று கேட்க... அனைவ ருடைய கண்களிலும் ஒருவிதமான மருட்சி.

சிலரிடம் குறுநகை, சிலர் குசுகுசு வெனப் பேசினர், ஒரு சிலர் பேசச் சொற்கள் இன்றித் திகைத்தனர். உங்களுடைய அனைத்துப் பார்வை களுக்கும் ஒரே பதில், இந்தக் கலந்துரையாடல் வகுப்பறையோடு முற்றுப்பெறும்.

வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளப் படாது, மிகவும் ரகசியமானது என்றேன். ஒரே நேரத்தில் வெளிவந்த அத்தனை பெருமூச்சுகளையும் தாங்காமல் வகுப்பறை திணறியது.

ஒப்பீடு

பலவிதமான பதில்கள். மதிப்பெண் போன்ற வழக்கமான காரணங்களுக்காகப் பெற்றோரிடம் திட்டு வாங்குவதைத் தவிர, பெரும்பாலான மாணவர்களிடம் வருத்தங்கள் இல்லை. அதே கேள்வி மாணவிகளிடம் வந்தபோது சற்றே வீரியம் அடைந்திருந்தது.

ஒரு மாணவி, எழுந்து நின்று பேசத் தொடங்கிய சில நொடிகளில் குரல் தழுதழுத்துச் சத்தமிட்டு அழுதார். ஆறுதல் கூறி தண்ணீர் கொடுத்துத் தேற்றிய பிறகு, என்னவென்று கேட்டேன். பெற்றோர் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறினார். ஆச்சரியமாகப் பார்த்தபோது, “ஆமாம்! என் உறவினர் வீட்டு பிள்ளைகளெல்லாம் ‘டாப்பர்ஸ்’.

நிறைய மதிப்பெண் வாங்குறாங்க. அவங்களோட என்னை ஒப்பிட்டு என் மதிப்பெண்ணை ஒப்பிட்டு... அம்மா, அப்பா சொல்லிக் காட்டிக்கிட்டே இருக்காங்க” என்று விசும்பலோடு கூறினார்.

பல் துலக்கும் போதுகூட கையில் புத்தகத்தை வைத்து படிக்கச் சொல்வதாகக் கலங்கினார். ஒரு வழியாக ஆறுதல் கூறித் தேற்றினாலும், மனம் என்னவோ அங்கேயே நின்றது.

பெரும் சுமை

நானும் எனது வயதை ஒத்தவர்களும் பள்ளியில் படித்த காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சியோடு வளர்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அன்றும் வெவ்வேறு காரணங்களுக்காகச் சரிவரப் படிக்க முடியாமல், உயர் மதிப்பெண் வாங்க இயலாமல் மனச்சுமையை எதிர் கொண்டிருப்போம்.

அதைவிடப் பன்மடங்கு அதிகமான சிக்கல்க ளோடும் அடர்த்தியோடும் இன்றைய மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம். இவை தற்கால மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் எனப் பெரியவர்கள் சிந்திக்கத் தவறுவது ஏன்?

தனி உலகம்

ஒப்பிட்டுக் கூறுவதன் மூலமாக முயற்சி தடைப்படும் என்பதைப் பெரியவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். இன்றைக்குப் பள்ளி வகுப்பறையில் ஏற்படாத பல மாற்றங்கள் பின்னாளில் கல்லூரி செல்லும்போதோ, அதற்குப் பிறகோ ஏற்படலாம்.

அதற்கான அடிப்படைத் திறன்களை வளர்க்கும் இடம்தான் பள்ளி வகுப்பறை. எங்களைப் போன்றோரின் சிறுபிராயத்தில் நாங்கள் சுமந்த சுமைகளை இறக்கிவைக்கும் இடமாக விளையாட்டு மைதானங்கள் இருந்தன, நண்பர்கள் இருந்தனர், வீடும்கூட இருந்திருக்கலாம்.

ஆனால், நம் குழந்தைகளின் மனச்சுமையைத் தாங்கிப் பிடிக்கும் கரங்களாக நாம் ஏன் இருப்பதில்லை? நம்மைவிட நாம் வாழ்ந்த காலத்தைவிட பல்வேறு விதமான உள, புறச் சூழல் சிக்கல்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு உலகமாக இருப்பதை நாம் ஏன் உணர மறுக்கிறோம். சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது.

ஊக்கப்படுத்துவோம்

மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் குழந்தைகளிடம் பாராட்ட ஏராளமான விஷயங்கள் இருப்பதைப் பற்றி யோசிக்கலாம். சின்னஞ்சிறிய விஷயங்களுக்கும் அவர் களைப் பாராட்டி மகிழுங்கள்.

முன்பு வாங்கிய மதிப்பெண்ணையே இப்போது வாங்கினாலும் பாராட்டுங்கள். அதைவிட அதிகமாக வாங்கினாலும் பாராட்டுங்கள். வாங்கிய மதிப்பெண்ணைவிடக் குறையும்போது ஊக்கப்படுத்துங்கள்.

ஒப்பிட்டுக் குறை கூறும்போது எடுக்கவேண்டிய முயற்சி எடுபடாமல் போய்விடும். ஆறுதலும் உற்சாகமூட்டலும் அவர்களை வளர்த்தெடுக்கும் என்பதை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். மதிப்பெண்ணைத் தாண்டி சில குழந்தைகள் ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

அதன் அழகை ரசியுங்கள். இசையில் இன்பம் எய்துபவர் களாக இருப்பார்கள். நீங்களும் இசைந்து பாடுங்கள். சிலர் நடனம் ஆடுவதில் விருப்பத்துடன் இருப்பார்கள். உங்களால் இணைந்து ஆட முடியாவிட்டாலும், கைதட்டி வரவேற்றுப் பாருங்களேன்.

எல்லாரும் ஒன்றுபோல் இருந்து விட்டால் உலகம் எவ்வாறு இயங்கும் என்கிற இயற்கை விதியை ஏற்போம். குழந்தைகள் யாரோ அல்ல, எதிர்காலத்தை ஆளப்போகும் தலைமுறை யினர். அவர்கள் எல்லாவிதமான ஆற்றலையும் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து உற்சாகப்படுத்துங்கள்.

- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியர், எஸ். ஆர். வி. பள்ளி, திருச்சிராப்பள்ளி; agracy5533@gmail.com

SCROLL FOR NEXT