வெற்றிக் கொடி

‘அரிவாள் செல்’ எனும் மரபணுப் போர் | நட்சத்திரக் குழந்தைகள் 19

ரேவதி

ஆறு வயது கவியரசன், தெரு வில் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதை ஜன்னல் வழியாக ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கால்கள் மட்டும் அவனுக்கு ஒத்துழைத்திருந்தால் அந்த விளையாட்டில் முதல் உதை அவனுடையதாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், அவனது நரம்புகளுக்குள் ஓடும் ரத்தம், மென்மையான நதி போலன்றி, கூர்மையான அரிவாள்களைச் சுமந்து செல்லும் ஒரு போர்க்களமாக மாறியிருந்தது. ஒவ்வொரு முறையும் அந்தப் பிறை வடிவ அணுக்கள் அவனது மெல்லிய ரத்த நாளங்களில் சிக்கிக்கொள்ளும்போதும், உடலெங்கும் மின்னல் வெட்டுவது போன்ற கொடூர வலி அவனை நிலை குலைய வைக்கும்.

அது வெறும் ரத்த சோகை அல்ல, அவனது ஒவ்வொரு சுவாசத்திலும், ஒவ்வொரு அசைவிலும் மௌனமாகப் போராடும் சிக்கிள் செல் அனீமியா. பொதுவாக ரத்த சிவப்பணுக் கள் வட்ட வடிவில், மென்மையாக, ரத்த நாளங்களில் எளிதாகப் பாய்ந்து செல்லும் வகையில் இருக்கும். ஆனால், சிலருக்குச் சிவப்பணுக்கள் நிலவின் பிறை வடிவத்திலோ, புல் அறுக்கும் ‘அரிவாள்' வடிவத்தில் மாறிவிடும்.

இது சாதாரண மாற்றமல்ல; அந்த மனிதரின் வாழ்நாள் முழுவதையும் வலியால் நிரப்பும் ஒரு மரபணுப் போராட்டம். தந்தை, தாய் இருவருமே அரிவாள் செல் ரத்த சோகைக்கான (Sickle Cell Anemia) காரணியைச் சுமந்திருந்தால் பிறக்கும் குழந்தையை இந்நோய் முழுமையாகப் பாதிக்கும்.

ஒருவேளை பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் இருந்தால், தான் பாதிக்கப்படாவிட்டா லும் அடுத்த தலைமுறைக்கு நோயைக் கடத்துபவராக அந்தக் குழந்தை வளரும்.

ஒழிப்புத் திட்டம்

கடந்த காலத்தில் இந்த நோய்க்கு முறையான சிகிச்சை இல்லை. அறிவியல் வளர்ச்சியாலும் அரசுகளின் முன்னெடுப்பாலும் சமீபத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. இந்திய அரசால் 2023இல் தொடங்கப்பட்டது, தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்புத் திட்டம் (2047). நோய்ப் பாதிப்பு அதிகம் உள்ள 17 மாநிலங்களில், 40 வயதுக்கு உள்பட்ட 7 கோடி பேருக்குப் பரிசோதனை செய் வதே இதன் இலக்கு.

தமிழ்நாடு இந்த நோயைக் கையாளு வதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. குறிப்பாக நீலகிரி, ஆனைமலை போன்ற பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கவனம் செலுத்து கிறது. பழங்குடியின வட்டாரங்களில் உள்ள அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார் களுக்கும் கட்டாயப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தாய்க்குப் பாதிப்பு இருந்தால், தந்தையும் பரிசோதிக்கப்படுகிறார். இருவருக்கும் பாதிப்பு இருந்தால், மரபணு ஆலோசனையும் கருவில் இருக்கும் குழந்தையைப் பரிசோதிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

மலைக் கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களைச் சென்றடைய நடமாடும் மருத்துவ வாகனங்கள் பயன்படுத்தப்படு கின்றன. இந்த வாகனங்களில் உள்ள ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் 15 நாள்களுக்கு ஒருமுறை கிராமங் களுக்குச் சென்று அங்கேயே பரிசோத னைகளை மேற்கொள்கின்றனர்.

கல்விசார் தேவைகள்

கணிக்க முடியாத ‘வலி நெருக்கடிகள்’, அதீத சோர்வு, நோய்த்தொற்று களால் பாதிக்கப்படக்கூடிய தன்மையை இந்நோய் கொண்டி ருப்பதால், சிறுவயதி னருக்குக் கூடுதல் ஊக்கம் அவசியம். இம்மாணவர்களின் ஆரோக்கியத்தை விட்டுக்கொடுக்காமல் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை உறுதிப் படுத்த, பாரம்பரியமான, கட்டுப்பாடான பள்ளிக் கட்டமைப்பில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

அரிவாள் செல் ரத்த சோகை உள்ள ஒரு குழந்தைக்குத் தொடர்ச்சியான நீர்ச்சத்து, உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பது மிக அவசியம். சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவும்போலிக் ஆசிட் நிறைந்த உணவு, சமச்சீர் உணவு வழங்கப்பட வேண்டும்.

பள்ளிகள் தடையற்ற குடிநீர் வசதியை யும், அடிக்கடி கழிவறை செல்வதற்கான இடைவேளைகளையும் வழங்க வேண்டும். ஏனெனில் நீர்ச்சத்து குறை பாடு கடுமையான வலியைத் தூண்டும்.

அதிக வெப்பம், குளிர் இரண்டுமே வலியைத் தூண்டும் என்பதால் வகுப் பறையில் அமரும் இடம் ஏசி துவாரங்கள் அல்லது ஜன்னல்களுக்கு அருகில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ஒரு மாணவர் தனக்கு வலி தொடங்குவதை உணர்ந்தாலோ அல்லது அதீத சோர்வைச் சந்தித்தாலோ, எவ்வித கேள்வியும் இன்றி உடனடியாக ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.

நெகிழ்வான பாடத்திட்டம்

பாதிக்கப்பட்ட மாணவர் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட லாம் அல்லது வீட்டில் ஓய்வெடுக்க வேண்டி இருக்கலாம். இதனால் அவர்கள் கல்வியில் பின்தங்கி விடாமல் இருக்கப் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை.

* வருகைப்பதிவு: மருத்துவக் காரணங்களுக் காகப் பள்ளிக்கு வராத நாள்களுக்கு அபராதம், தண்டனைகளைத் தவிர்க்க வேண்டும். மாணவர் வீட்டிலிருந்தே படிக்க ஏதுவாகப் பதிவு செய்யப்பட்ட பாடங்கள் அல்லது இணையப் பாடப் பொருள்களை வழங்க வேண்டும்.

* பாடச்சுமை குறைப்பு: வலி நெருக்கடியின்போது அல்லது அதற்குப்பிறகு, மாணவரின் சிந்திக்கும் ஆற்றல் குறைவாக இருக்கலாம். வீட்டுப் பாடங்களைக் குறைப்பதன் மூலமோ, முக்கியத் திட்டப்பணிகளுக்கான காலக்கெடுவை நீட்டிப்பதன் மூலமோ அவர் களின் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.

* தேர்வுச் சலுகைகள்: தேர்வில், இம்மாணவர்களுக்குக் கூடுதல் நேரம் வழங்குவது, தகுந்த வெப்பநிலையுள்ள அறையில் தேர்வு எழுத அனுமதிப்பது அவர்களின் சோர்வைச் சமாளிக்க உதவும்.

சோம்பேறி அல்ல

அரிவாள் செல் ரத்த சோகை உள்ள குழந்தைகளின் உளவியல் ஆரோக்கியத் துக்கு, அவர்களைப் புரிந்துகொள்ளுதல் முக்கியப் பங்களிக்கிறது. உடற்கல்வி வகுப்புகளில், இவர்களை முழுமையாக விலக்கி வைக்காமல் அவர்களது எல்லைக்கு உள்பட்ட செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும்.

குறைந்த உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டு களில் அவர்களை ஊக்குவிக்கலாம், அதேநேரம் அவர்கள் சோர்வாக உணரும் போது விளையாடுவதை நிறுத்தவும் ஓய்வெடுக்கவும் அனுமதிக்க வேண்டும்.

ஆசிரியர்களும் சக மாணவர்களும் இந்நோய் குறித்துத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்; அப்போதுதான் ஓய்வு தேவைப்படும் மாணவரை ‘சோம்பேறி' எனக் கருதாமல் ஆதரவான சூழலை உருவாக்க முடியும்.

பெற்றோர், ஆசிரி யர்கள், மருத்துவக் குழுவினரை உள்ள டக்கிய ஒரு தனிப்பயனாக்கப்பட்ட கல்வித் திட்டம் இம்மாணவர்களுக்குச் சிறந்த முறையில் உதவும். நோயற்ற சமூகத்தைப் படைக்க, அறிவி யலின் துணையோடு விழிப்புணர்வுப் பாதையில் பயணிப்போம்!

(ஒளிரும்)

- கட்டுரையாளர்: முனைவர், சிறப்புக் கல்வியியல் நிபுணர்; revbest15@gmail.com

SCROLL FOR NEXT