தலையங்கம்

புரளியை புறம் தள்ளுங்கள்

செய்திப்பிரிவு

‘வேப்பமர உச்சியில் நின்னு, பேயொன்னு ஆடுதுன்னு விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க. உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க, வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே...’ என்று சிறுவர்களை சீர்திருத்த பிரபல கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பொன்வரிகள்தான் இவை. இந்த வரிகள்வெறும் மனப் பேயைக் கண்டு பயம் கொள்ளாதே என்று அர்த்தம் இல்லை மாணவர்களே. எதையும் உடனே நம்பி விடாதே.

பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துகிறது. ஒரு கருத்தை யாராது உங்களிடம் கூறினால், ஏன் இப்படி நடக்கிறது, இதனால் யாருக்கு லாபம் என்பதை பகுத்து ஆராய வேண்டும். பெரியவர்கள் சொல் பேச்சை கேட்பது அவசியம்தான். ஆனால், அது அறிவுக்கும் அறிவியலுக்கும் சரியானதா என்று சிந்திக்க வேண்டும். கலாச்சாரம் மிகுந்த நமது தேசத்தில் புரளிகளுக்கும் கட்டுக் கதைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதில் ஒரு சில நல்லது இருந்தாலும், அறிவையும் அறிவியலையும் முடக்கும் பல தீமைகள் உள்ளன.

அதை உடைக்க முதலில் பாடப் புத்தகங்களை தாண்டிய ஒரு கண்ணோட்டம் நமக்கு இருக்க வேண்டும். அந்த கண்ணோட்டம் பெற, முதலில் அதுதொடர்பாக படிக்க வேண்டும். தற்போது 75 சதவீத மாணவர்கள் கையில் ஸ்மார்ட்போன் கிடைத்துவிட்டது. அதை கேம்ஸ் விளையாடவோ, வீடியோ பார்க்கவும்தான் நாம் பயன்படுத்திகிறோம். அது எப்படி உங்கள் அறிவை தீட்டும். இணையம் என்ற ஆயுதத்தால் பல புரளிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

பல அறிவியல் முன்னேற்றம் கண்டுவிட்டோம். நல்லதை தேடி படித்தால் மட்டுமே புரளியில் இருந்து தப்பிக்கும் பகுத்தறிவை பெற முடியும். பகுத்தறிவு என்பது புரளியை உடைக்க மட்டுமான ஆயுதமில்லை. அது அறிவியலை வளர்க்கும் ஆயுதம். அதை பெற்றால் மட்டுமே வளமான அறிவியலையும், சமூதாயத்தையும் நாம் உருவாக்க முடியும். அதை நீங்கள்தான் செய்ய முடியும்.

SCROLL FOR NEXT