ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக மலர் தொட்டிகள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். | படம்: ஆர்.டி.சிவசங்கர். |
ஊட்டி: ஊட்டியில் மே மாதம் நடைபெறவிருக்கும் 128-வது மலர்க் கண்காட்சிக்காக அரசு தாவரவியல் பூங்கா முழு வீச்சில் தயாராகி வருகிறது. சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த ஆண்டு சுமார் 25 லட்சம் பேர் வந்த நிலையில், இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், கோடைகாலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும்.
இதில் முக்கியமாக ரோஜா காட்சி, மலர்க்கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி ஆகியவை அடங்கும். உலக பிரசித்தி பெற்ற இந்த கண்காட்சியை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
கண்காட்சி தொடங்கும் முதல் இரு நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மலர்க்காட்சியை கண்டு ரசித்து செல்வார்கள். கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வனங்கள் மற்றும் புல்வெளிகள் காய்ந்து போயுள்ளன.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதானமும் காய்ந்து போய் உள்ளது. இதனால், பராமரிப்புப் பணிக்காக புல்தரை மூடப்பட்டுள்ளது. புல்தரையில் உள்ள பள்ளங்களை சீரமைக்கஉரம் கலந்த மண்கொட்டப்பட்டு, தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.
மலர்க்காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 50 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டிச் செடிகள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இந்த ஆண்டு கோடை மழை சரிவர பெய்யாததால், பூங்காவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.
கடும் வெயிலால் செடிகள்வாடி வருகின்றன. இதனால், வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து செடிகளுக்கு பாய்ச்சி வருகிறோம். கடந்த சில நாட்களாக மழைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. மழை பெய்தால் பூங்கா பொலிவு பெறும். மழை பெய்யாவிட்டால் சிக்கல் ஏற்படும். மலர்க்கண் காட்சிக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன’’ என்றனர்.
10 லட்சம் மலர் நாற்றுகள்
பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஜெரேனியம், சைக்லமன், பால்சம் மற்றும் பல புதிய ரக ஆர்னமெண்டல் கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியா, பிகோனியா, கேன்டீடப்ட், பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ் உள்ளிட்ட 275 வகையான விதைகள், செடிகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து பெறப்பட்டு மலர்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பூங்காவின் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.