கொடைக்கானல் அருகே வட்டக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலா இடமான டால்பின் நோஸ்.

 
சுற்றுலா

ரோப் கார் திட்டத்துக்காக கொடைக்கானலில் ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு

ஆ.நல்லசிவன்

பழநி: கொடைக்கானல் வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரை ரோப் கார் அமைக்கும் திட்டத்துக்காக வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும். ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.

          

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், கடந்த 2022-ல் பழநி - கொடைக்கானல் வரை 12 கி.மீ. தொலைவுக்கு ரோப் கார் திட்டம், மாநில அரசு பங்களிப்புடன் ரூ.500 கோடியில் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

மேலும், இத்திட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணியில் ஆஸ்திரேலிய வல்லுநர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன் பிறகு, தற்போது வரை இத்திட்டத்தில் முன்னேற்றம் இல்லை. இதனால், சுற்றுலா பயணிகள், கொடைக்கானல் மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

சுற்றுலாத்துறை மூலம் கொடைக்கானல் அருகேயுள்ள வட்டக்கானல் பகுதியில் இருந்து வெள்ளகெவி வழியாக, பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை வரை 8.3 கி.மீ., தொலைவுக்கு ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது.

இதற்காக, கடந்த ஜன. 9-ம் தேதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர், வட்டக்கானல் பகுதியில் முதல்கட்ட ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, ரோப் கார் அமைய உள்ள பகுதி வனப்பகுதி வழியாக செல்வதால், 2-ம் கட்டமாக வட்டக்கானல் முதல் கும்பக்கரை வரையுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக வனத்துறையிடம் அனுமதி கோர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ரோப் கார் அமைக்க திட்டமிட்டுள்ள பகுதிகள் காப்புக் காட்டுக்குள் வருகிறது.

எனவே, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எங்களிடம் அனுமதி பெறாமல் வனப் பகுதிக்குள் சென்று ஆய்வு நடத்த முடியாது. அவர்கள் அனுமதி கோரினால், வனத்துறை ஒத்துழைப்புடன் வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு செய்யலாம். அதற்கு எந்த தடையும் இல்லை, என்றனர்.

SCROLL FOR NEXT