கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடவரை கோயில் இது முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது காலத்திலேயே கழுகுமலை மலை மீதுள்ள சமணப்பள்ளி மற்றும் வெட்டுவான் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
கடினமான பாறையை சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி கோயிலாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதனை வெட்டுவான் கோயில் என அழைக்கின்றனர். இத்தகைய கோயில் தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பதே இதன் சிறப்பு. வரலாற்று சின்னங்களாக உள்ள இவற்றை தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த மலை தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுபாட்டில் பாதுகாக்கப்பட்ட மரபு சின்னமாக உள்ளது. இங்கு கடந்த 9.8.2021-ல் ரூ.50 லட்சத்தில் வெட்டுவான் கோயில் முதல் உச்சி பிள்ளையார் கோயில் வரை கைப்பிடிகள் மற்றும் படிகள் அமைத்தல், ரூ.19 லட்சத்தில் 3 பெரிய அளவிலான ஒளிரும் பெயர் பலகைகள், ரூ.11 லட்சத்தில் 2 சிறிய ஒளிரும் பெயர் பலகைகள், தலா ரூ.10 லட்சத்தில் கிரிப்பிரகார மேல ரதவீதியில் பேருந்து நிலையம் அருகே மற்றும் கழுகாசலமூர்த்தி கோயில் அருகே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அமைப்பை ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வழிகாட்டி இல்லை: மலைப்பகுதிக்கு ஒரு காவலாளி மட்டுமே உள்ளார். ஆனால், இங்குள்ள சமண சிற்பங்கள் மற்றும் சமணர் படுக்கை, வெட்டுவான் கோயில் உருவான விதம் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விளக்க வழிகாட்டி நியமிக்கப்படவில்லை.
இதனால், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வெளி மாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு வந்தால் அவர்களுக்கு மலையின் சிறப்புகளை அறிய முடியவில்லை. எனவே, மலைப்பகுதியில் உள்ள சிற்பங்கள் குறித்து விளக்கக்கூற வழிகாட்டியை நியமிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கழுகுமலையை சேர்ந்த ஆறுமுகம் கூறியதாவது: சிறப்புகள் வாய்ந்த கழுகுமலையை கடந்த 15.7.2014 அன்று சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் புராதன நகரமாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதையடுத்து மலை மீதுள்ள வெட்டுவான் கோயில், சமணர் சிற்பங்களை சுற்றுலா பயணிகள் சிரமமின்றி பார்ப்பதற்காக மலை மீது ஏறிச்செல்ல படிக்கட்டுகளின் இருபுறமும் கம்பிகள் அமைக்கப்பட்டன. மலையில் சமணர் சிற்பங்கள் உள்ள இடம், வெட்டுவான் கோயில் உள்ள இடம் ஆகியவற்றை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டது. மலையின் நுழைவாயில் பகுதியில் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டது. பூங்காவை சுற்றி நிழல் தரும் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன.
வழிகாட்டி இல்லாததால் இங்கு வருவோர் சிற்பங்களை ரசித்துவிட்டு, புகைப்படம் எடுத்துவிட்டுச் செல்கின்றனர். மலையின் நுழைவு பகுதியிலும், மலையில் உள்ள அய்யனார் கோயில் பகுதியிலும் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். மலைப்பகுதியில் மின் விளக்குகள் பொருத்தி ஒளிர விட வேண்டும்.
மலையின் நுழைவாயில் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவற்றை நிறைவேற்றினால் கழுகுமலை சுற்றுலாத் தலமாக மேம்படும். இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகும், என்றார்.