தொடர் விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதல் சீசன், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் இரண்டாவது சீசன் மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் உட்பட பண்டிகை தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பைன் பாரஸ்ட்: உதகையின் முக்கிய சுற்றுலாத்தலமான அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மிதிபடகு, மோட்டார் படகில் சென்று உற்சாகமடைந்தனர். உதகை - கூடலூர் சாலையில் உள்ள பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைகாரா படகு இல்லத்தில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை மட்டும் அல்லாமல் குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி, முதுமலை உட்பட பல்வேறு இடங்களிலும் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதற்கு இடையே 70 சதவீத சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களில் வந்ததால் உதகை - மேட்டுப்பாளையம் சாலை, உதகை - கூடலூர் சாலை மற்றும் உதகை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் கூடுதலாக நியமிக்கப்பட்டு இருப்பதால் வாகனங்கள் தேங்கி நிற்காமல் மெதுவாக நகர்ந்தபடியே இருந்தன.
இது குறித்து போலீஸார் கூறும் போது, ‘போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 200 போலீஸார் நியமிக்கப்பட்டு உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறை முடியும் வரை இவர்கள் முழு வீச்சில் பணியாற்றுவார்கள். இதேபோல் ஹில்காப் எனப்படும் இருசக்கர வாகன ரோந்து படையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். சீசன் நேரத்தில் கடைபிடிக்கும் நடைமுறையே தற்போதும் உள்ளதால் வாகனங்கள் எப்போதும் நகர்ந்தபடியே இருக்கும்’ என்றனர்.