குன்னூர்: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயிலின் ஃபர்னஸ் ஆயில் இன்ஜின் டீசல் என்ஜினாக மாற்றப்பட்டு சோதனை ஓட்டம் இன்று (அக்.24) நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது சுற்றுலா பயணிகளுக்காக இந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே தற்போது இயக்கப்படும் மலை ரயில் ஃபர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. ஃபர்னஸ் ஆயிலால் இயக்கப்படுவதால் அதிகளவில் மாசு ஏற்பட்டது. இதனால் ஃபர்னஸ் ஆயில் மூலம் மலை ரயில் இயக்கப்படுவதை மாற்றியமைக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து ஃபர்னஸ் ஆயிலுக்கு பதிலாக டீசல் இன்ஜினாக மாற்றியமைக்கும் பணியை குன்னூர் ரயில்வே பணிமனையில் சீனியர் டெக்னீஷியன் மாணிக்கம் என்பவர் மேற்கொண்டார்.
அவரது முயற்சியால் ஏற்கெனவே 3 ஃபர்னஸ் ஆயில் இன்ஜின்கள் டீசல் இன்ஜினாக மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒரு இன்ஜின் மட்டும் மாற்றப்படாமல் இருந்த நிலையில் இந்த இன்ஜினும் தற்போது டீசல் இன்ஜினாக மாற்றப்பட்டு இன்று (அக்.24) ரன்னிமேடு வரை இயக்கப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. தொடர்ந்து 2-வது கட்டமாக மீண்டும் ஒரு முறை சோதனை ஓட்டம் நடத்திய பிறகு இந்த இன்ஜின் மூலமாக மலை ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.