நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை, மாத்தூர் தொட்டிபாலம், உதயகிரிகோட்டை ஆகிய சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கூறிய மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, அவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் கூறுகையில் “கன்னியாகுமரி மாவட்டமானது அணைகள், கடற்கரை பகுதிகள், நீர்வீழ்ச்சிகள், மலைகள் உள்ளிட்ட அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டம் என்பதால் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டிற்குட்பட்ட மாவட்டங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிக்கின்றனர். சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகள் சுற்றுலாத் துறையின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் முட்டம் கடற்கரை பகுதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு முட்டம் சுற்றுலாத் தலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலரிடம் கேட்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நாபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.37 கோடி மதிப்பில் பரளியாற்றின் குறுக்கே மாத்தூர் முதல் முதலார் வரை இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருகிறது.
பாலப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாத்தூர் தொட்டிபாலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து உதயகிரிகோட்டை சுற்றுலா தளத்தினை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றுலா மையங்கள் அனைத்திலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.