உதகை தாவரவியல் பூங்காவில் நேற்று மலர்களை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.படம்: ஆர்.டி.சிவசங்கர் 
சுற்றுலா

காலாண்டு விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. கடந்த மாதம் சீசன் தொடங்கியும், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து உதகையில் குவிந்து வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்காவில் 4.50 லட்சம் செடிகளில் பூக்கள்பூத்துக் குலுங்குகின்றன. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 10,000 மலர்த் தொட்டிகள் மலர்க்காட்சி திடலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2,000 மலர்த்தொட்டிகளைக் கொண்டு ‘ஐ லவ்ஊட்டி’ வாசகம் உட்பட பல்வேறுசிறப்பு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்தனர். மலர்கள் பின்னணியில் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

இதேபோல, படகு இல்லம், ரோஜாப் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. இதனால், உதகையில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT