நாகர்கோவில்: கோடை சீஸனை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தைவிட அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்களில் கூட்டம் அதிகரித்திருந்தது.
முக்கடல் சங்கமம் கடற்கரையில் காலையில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை காண குவிந்தனர். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பின்னணியில் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா படகில் பயணம் செய்து உற்சாகமடைந்தனர். மாலையில் சூரிய அஸ்தமன காட்சியை கண்டு ரசித்தனர்.
கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகையால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் விற்பனை களைகட்டியுள்ளது. அதே நேரம் குடிநீர், கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரி கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, லெமூர் பீச், வட்டக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமிருந்தது.