கன்னியாகுமரியில் கோடை சீஸனை முன்னிட்டு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காக படகு தளத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள். (அடுத்த படம்) கன்னியாகுமரியில் படகு தளத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் காட்சிப் பொருளாக உள்ளன. 
சுற்றுலா

குடிநீரின்றி சுற்றுலா பயணிகள் தவிப்பு: கன்னியாகுமரி பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா?

எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் குடிநீர் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியி்ல் கோடை சீஸன்களைகட்டியுள்ளது. கோடை விடுமுறை என்பதால் இந்தியா முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் விவேகானந்தர் பாறைக்கு படகு பயணம் மேற்கொள்ள கடும் கூட்டம் நிலவுகிறது. அதுபோல், அதிகாலையில் சூரிய உதயத்தைக் காண முக்கடல் சங்கமம் மற்றும் சூரிய உதய மையத்தில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.

ஆனால், பொது இடங்களில் இருக்கும் குடிநீர் தொட்டிகள் இப்போது காய்ந்து கிடக்கின்றன. படகு தளம் செல்லும் வழியில் உள்ள சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்கும் குழாய்கள் காட்சிப் பொருளாக உள்ளன. அனைவருமே கடைகளில் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில்களை வாங்கும் பரிதாப நிலையில் உள்ளனர்.

இது குறித்து, கன்னியாகுமரி சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: கோடை சீஸனை முன்னிட்டு கன்னியாகுமரியில் எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்காமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. படகு இல்லத்துக்கு செல்லும் வழியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் குழாய்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இவற்றில் குடிநீரே வருவதில்லை. தற்போது கோடை சீஸனிலும் இவற்றை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோல், சன்னதி தெருவில் உள்ள குடிநீர் தொட்டி, முக்கடல் சங்கமம், கடற்கரை சாலை, சூரிய அஸ்தமன மையம் என அனைத்து பகுதிகளிலும் உள்ள பேரூராட்சி குடிநீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கான எவ்வித அடிப்படை வசதியும் செய்துதராமல், வருவாய் ஈட்டுவதில் மட்டுமே சுற்றுலாத் துறையும், பேரூராட்சி நிர்வாகமும் குறியாக உள்ளன. அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம்உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT