கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவில் பறவை பறப்பது போல் தோற்றமளிக்கும் ‘பேர்ட் ஆஃப் பாரடைஸ்’ பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிரையன்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சிக்காக பூச் செடிகளை நடவு செய்யும் பணி நடக்கிறது. இங்கு பல்வேறு கால நிலைகளில் பூக்கும் பூச்செடிகள் ஏராளமாக உள்ளன. இதை பார்க்க ஆண்டுதோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது பிரையன்ட் பூங்கா மற்றும் ரோஜா கார்டனில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் ‘பேர்ட் ஆஃப் பாரடைஸ்’ செடியில் பூக்கள் மலர்ந்துள்ளன. அவை ஆரஞ்சு, நீல நிற வண்ணத்தில் பறவை பறப்பது போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றன. இப்பூக்களை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இது குறித்து தோட்டக்கலை அலுவலர் பார்த்தசாரதி கூறிய தாவது: பேர்ட் ஆஃப் பாரடைஸ் வகை செடி தென் ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டது. ஆண்டு தோறும் டிசம்பரில் பூத்து ஒரு மாதம் வரை பட்டுப் போகாமல் இருக்கும். ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என 3 வண்ணங்களில் பூக்கும். கொடைக்கானலில் ஆரஞ்சு வண்ணத்தில் பூக்கும் செடி மட்டும் உள்ளது. ஒரு செடியில் ஒன்று முதல் 5-க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கும். அவை பார்ப்பதற்கு பறவை பறப்பது போல் தோற்றமளிக்கும் என்றார்.