சுற்றுலா

நீர்ச்சுழலும் புதைமணலும்... - பள்ளிவிளங்கால் அணைக்கட்டில் காத்திருக்கும் ஆபத்து!

எஸ்.கோபு

பொள்ளாச்சி: ஆழியாறு அருகே பள்ளிவிளங்கால் அணைக்கட்டில் உள்ள சுழல் மற்றும் புதைமணல் ஆபத்தை அறியாமல் வெளியூர் சுற்றுலா பயணிகள் குளித்து வருவதால் அணைக்கட்டு பகுதியில் உயரமான சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் ஆழியாறு அணை அருகே பள்ளிவிளங்கால் அணைக்கட்டு உள்ளது. ஆழியாறு ஆற்றில் கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கட்டில், ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். அணையின் அருகிலேயே ரம்மியமாக காணப்படும் இந்த அணைக்கட்டில் பல்வேறு இடங்களில் நீர்ச் சுழல்களும், புதை மணல் பகுதிகளும் இருப்பதால் ஆபத்து நிறைந்து காணப்படுகிறது.

சுற்றுலா தலமான ஆழியாறு அணைக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகள், அதன் அருகில் உள்ள பள்ளிவிளங்கால் அணைக்கட்டுக்கு சென்று குளிக்கின்றனர். அணைக்கட்டில் சுழல் இருப்பது தெரியாமலும், ஆழமான பகுதிக்கு சென்று புதைமணலில் சிக்கியும் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, கோடை விடுமுறை காலத்தில் ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பள்ளிவிளங்கால் அணைக்கட்டுக்கும் வருகின்றனர்.

அங்கு நீர்ச் சுழல்கள் நிறைந்த பகுதி சுற்றுலா பயணிகள் குளிக்கக் கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதையும் மீறி சுற்றுலா பயணிகள் குளிக்க செல்கின்றனர். வெளியூரில் இருந்து ஆற்றுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளில், பெரும்பாலான இளைஞர்கள் மது போதையிலும், நீச்சல் பழகும் ஆர்வத்திலும் ஆற்றில் இறங்கி சுழல் மற்றும் புதைமணலில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘அணைக்கட்டு பகுதியில் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க அணைக்கட்டில் நீர்ச்சுழல், புதைமணல் உள்ளிட்ட ஆபத்துகள் குறித்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் விடுமுறை நாட்களில் அணைக்கட்டு பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT