கோப்புப்படம் 
தொழில்நுட்பம்

ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்கள் இனிமேல் இந்திய சட்டத்தை பின்பற்ற வேண்டும்: தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு திருத்தம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சமூக வலைதள நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்து வந்தது. சமூக வலைதளங்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றன. பொய்ச் செய்திகள், வன்முறையைத் தூண்டும் பதிவுகள், ஆபாசப் பதிவுகள் அதிகரித்துள்ளன. இவற்றை சமூக வலைதள நிறுவனங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறி வந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது.

அந்தப் புதிய விதிகளின்படி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் உள்ளடக்கங்கள் சார்ந்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கஅந்நிறுவனங்கள் தனியே அதிகாரியை நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து மக்கள் புகார்களை விசாரிக்க ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. முதலில் ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன. ஆனால், கூகுள் நிறுவனம் ஒப்புக் கொள்ளவில்லை.

இந்நிலையில் சமூக வலைதளங்கள் மீதான மக்களின் புகார்களை விசாரிக்க மேல்முறையீட்டுக் குழுக்கள் 3 மாதங்களுக்குள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப (இன்டர்மீடியரி கைட்லைன்ஸ் அண்ட் டிஜிட்டல் மீடியா எதிக்ஸ் கோட்) திருத்த விதிகளை மத்திய அரசு நேற்று கெசட்டில் வெளியிட்டது.

இந்தப் புதிய திருத்தத்தின்படி, இந்திய நாட்டுக்குள் செயல்படும் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் இனிமேல் இந்திய சட்டதிட்டங்களின்படியே செயல்பட வேண்டும். பயனாளர் புகார்களை சமூக வலைதள நிறுவனங்கள் 24 மணி நேரத்துக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.

இணையத்தை பாதுகாப்பானதாக மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

பயனாளர் புகார்களை சமூக வலைதள நிறுவனங்கள் 24 மணி நேரத்துக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

SCROLL FOR NEXT