தொழில்நுட்பம்

ஓராண்டுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம்; ஊழியர்களுக்கு ரூ.75 ஆயிரம்: ஃபேஸ்புக் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனாவை முன்னிட்டு ஓராண்டுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ஊழியர்களுக்கு ரூ.75 ஆயிரம் அலவன்ஸ் வழங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலை அடுத்து உலகம் முழுவதும் ஐடி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வீட்டில் இருந்தே தனது ஊழியர்களைப் பணியாற்றுமாறு தெரிவித்துள்ளன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர், தனது ஊழியர்கள் நிரந்தரமாகவே வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று கடந்த மே மாதம் தெரிவித்தது. மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் தனது ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் காலக்கெடுவை நீட்டித்து, அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸால் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய தனது ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர்கள் (சுமார் ரூ.75 ஆயிரம்) அலவன்ஸ் வழங்கப்படும் எனவும் ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே மேற்கொள்வதால் அதற்குரிய பர்னிச்சர் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு உதவியாக இத்தொகை வழங்கப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் கடந்த மே மாதம், 50 சதவீத ஊழியர்கள் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு 48 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT