தமிழகம்

மலைக்கோட்டையை ஆளும் இளம் படை - மாற்றங்களை எதிர்நோக்கும் திருச்சி மக்கள்

ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: திருச்சி மாவட்ட நிர்வாகத்தில் தற்போது அமைச்சர், ஆட்சியர், எஸ்.பி., மாநகராட்சி ஆணையர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இளம் வயதினர் பொறுப்பேற்றுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழகத்தின் இதயமான திருச்சியில் முக்கிய கோயில்கள், பன்னாட்டு விமான நிலையம், பெல், தேசிய தொழில்நுட்பக் கழகம், பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சமீபத்தில் பிரத்திக் தாயள் பொறுப்பேற்றுள்ளார். சட்டப்படிப்பை முடித்து முதல் முயற்சியிலேயே குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று, 2017-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.

நிதித் துறை, பட்ஜெட் நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவத்துடன், தற்போது 33 வயதில் திருச்சி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார். இதேபோல, திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வீர பிரதாப் சிங், மாநிலத்தின் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர்.

இயந்திரப் பொறியியல் பட்டதாரியான இவர், 2019-ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்து, தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளராகவும், மேட்டூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் முக்கிய நிர்வாக பொறுப்புகளையும் வகித்து, தற்போது 31 வயதில், திருச்சி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

மத்திய மண்டல காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் உமேஷ் டோங்கரே, 39 வயதில் திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளார். மாவட்டத்தின் சட்டம்- ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை, குற்றத் தடுப்பு உள்ளிட்ட முக்கிய சவால்களை கையாளும் பொறுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், திருச்சி மாவட்ட வனத் துறையிலும் 2020-ம் ஆண்டு முதல் இந்திய வனப்பணி அலுவலராக எஸ்.கிருத்திகா பணியாற்றி வருகிறார். 33 வயதான இவர், மாவட்டத்தின் வன வளங்கள் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடும் திட்டங்கள், உயிரின வள மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

அரசியலிலும்...

நிர்வாக அமைப்புகள் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் திருச்சியில் இளம் தலைமுறை முன்னணியில் உள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக உள்ள 31 வயதேயான ரமேஷ், மாநில அமைச்சரவையின் இளம் உறுப்பினர்களில் ஒருவராகவும், திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகவும் உள்ளார்.

இவர் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திலேயே தமிழக கோயில்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

மக்கள் எதிர்பார்ப்பு

நகர்ப்புற விரிவாக்கம், போக்குவரத்து நெரிசல், குடிநீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, முதலீடுகளை ஈர்த்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுலா மேம்பாடு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திருச்சி அடுத்த சில ஆண்டுகளில் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கி உள்ளது.

இதுகுறித்து திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘தற்போது முக்கிய பொறுப்புகளில் உள்ள இளம் அதிகாரிகள், அரசுத் திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிப்பது முதல் பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்ப்பது வரை பல்வேறு துறைகளிலும், தொழில்நுட்ப பயன்பாடு, டிஜிட்டல் கண்காணிப்பு, மக்கள் தொடர்பு போன்ற புதிய அணுகுமுறையை கொண்டு மாவட்டத்தை வளர்ச்சிப் பாதையில் விரைந்து எடுத்துச்செல்ல வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT