தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் உயர் பதவிகளில் பெண் ஆளுமைகள்

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர்கள், ஆட்சியர், மாவட்ட நிலை அலுவலர்கள் என அனைத்து உயர் பதவிகளிலும் பெண் ஆளுமைகள் அமர்ந்துள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வளர்ந்துவரும் நவீன உலகில் பெண்களின் பங்கு மிக இன்றியமையாதது. அரசியல், கல்வி, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றனர். இதற்கு விருதுநகர் மாவட்டம் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இம்மாவட்டத்தில் பெண்கள் முதன்மைப் பொறுப்புகளையும் முக்கிய பதவிகளையும் அலங்கரித்து வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் முதல் முறையாக 2 பெண்கள் அமைச்சர்களாக பொறுப்பு வகித்து வருகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறை அமைச்சராக கீர்த்தனாவும், சமூக நலத்துறை அமைச்சராக ஜெகதீஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியராக ஷரண்யா அறி, மாவட்ட வருவாய் அலுவலராக ஆனந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநராக வானதி ஆகியோர் பொறுப்பு வகித்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய பொறுப்புகளான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) சசிகலா,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிர்தவுஸ் பாத்திமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) பாண்டியம்மாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அம்சவேணி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திலகம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் மோகனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் (மேல்வைப்பாறு) மகேஷ்வரி, (வைப்பாறு கோட்டம்) மலர்விழி ஆகியோர் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

அதோடு, அரசு மருத்துவக் கல்லூரி டீன் அமுதாராணி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, சாத்தூர் நகராட்சி ஆணையர் ஜெகதீஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஞானபிரபா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதிலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஷீலா மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பெண்கள் உயர் பதவிகளில் பணியாற்றி வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT