நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
சென்னை: ‘தமிழகத்தை சீரழித்த திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பில்லை என்பது மிகத் தெளிவாகிறது. பெண்கள் பாதுகாப்பை பறிக்கும் சமூக விரோதிகளை வளர்த்துவிட்டது திமுக ஆட்சி’ என திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவண்ணாமலைக்கு வந்திருந்த 15 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் மனதை பதைபதைக்கச் செய்கிறது.
புண்ணிய பூமியான திருவண்ணாமலையில் தரிசனம் செய்ய வந்த இளம்பெண்ணை அவரது தாய் முன்பே இரு காவலர்கள் வன்கொடுமை செய்த ரணம் மனதை விட்டு ஆறும் முன்பே, மற்றொரு கொடூரம் அரங்கேறி இருப்பது திறனற்ற திமுக ஆட்சியால் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பில்லை என்பது மிகத் தெளிவாகிறது.
பெண்கள் பாதுகாப்பை பறிக்கும் சமூக விரோதிகளை வளர்த்துவிட்ட திமுக ஆட்சிக்கு நாளை மறுநாள் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவர். தேசிய ஜனநாயக கூட்டணியைத் தேர்ந்தெடுத்து தமிழகத்தை மீட்டெடுத்து காப்பர்’ எனத் தெரிவித்துள்ளார்