| படம்: ம.பிரபு |
சென்னை: முதல்வரைப் பார்க்காமல் செல்லமாட்டேன் எனக் கூறி, பெண் ஒருவர் தலைமைச் செயலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதால் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதல்வர் விஜய்யை பார்த்து மனு கொடுப்பதற்காக ஒரு பெண் வந்திருந்தார்.
சட்டப்பேரவை நுழைவு வாயிலின் அருகே காவல் துறையினர் அவரை தடுத்து, முதல்வரின் தனிப்பிரிவு அறையில் காத்திருக்க வலியுறுத்தினர். ஆனால், அவர் மறுத்துவிட்டு காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
‘இங்கு வருவதற்கு எனக்கு உரிமை உள்ளது. நான் முதல்வரை பார்க்காமல் செல்லமாட்டேன்’ எனக் கூறி தலைமைச் செயலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அழுதவாறு தர்ணாவில் ஈடுபட்ட அவரிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின், வேறு இடத்துக்குச் சென்று நீண்ட நேரம் முதல்வரை சந்திக்க காத்திருந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தனது மகன் சீனாவில் மருத்துவம் படித்து வந்த நிலையில், 2023-ம் ஆண்டு மீண்டும் பயிற்சிக்காக சீனா சென்றதாகவும், அங்குள்ள போலீஸார் தவறாக அவரை கைது செய்துவிட்டதாகவும், மகனை மீட்டு கொண்டுவர டெல்லி சென்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்தப் பெண் தெரிவித்தார். எனவே, இது தொடர்பாக முதல்வரை சந்தித்து அவரிடம்தான் மனு அளிப்பேன் என அவர் கூறினார்.