சென்னை: தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் சென்னையில் நாளை (பிப்.10-ம் தேதி) ஆட்டோக்கள் ஓடாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆட்டோ, கால் டாக்ஸி உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளதாகவும், பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போது ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்களாலும் ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் ஓலா, ஊபர், ரேப்பிடோ, நம்ம யாத்திரி உள்ளிட்ட நிறுவனங்களை முறைப்படுத்த அக்ரிகேட்டர் சட்டம் அமல்படுத்த வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் இடையேயான முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் பல பள்ளிகளில் சொந்த பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்தி பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது குழந்தைகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும், அரசுக்கும் கடுமையான வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கோவை, நெல்லை, மதுரை, திருச்சியில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும் நாளை (பிப்.10-ம் தேதி) தமிழகம் முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டமும், சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரகத்தில் காத்திருப்புப் போராட்டமும் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பங்கேற்பதால் சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.