சென்னை: “திமுக - அதிமுக கூட்டணி இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். ஒருவேளை கட்சித் தலைவர் ஸ்டாலின் இது முடிவெடுத்தால் கூட்டணியை ஏற்போம்” என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், காங்கிரஸ் தனது பழைய குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், நிலையான ஆட்சியமைய அவசர முடிவெடுக்க ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கியும், மதவாத சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என்றும் இந்த இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், “திமுக - அதிமுக கூட்டணி இல்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். ஒருவேளை கட்சித் தலைவர் ஸ்டாலின் இது முடிவெடுத்தால் கூட்டணியை ஏற்போம்.
தவெக ஆட்சியமைவதை நாங்கள் தடுக்கவில்லை, நாங்கள் ஆளுநரிடம் அனுமதிக்காதீர்கள் என்றா சொன்னோம்? ஆளுநர் தவெகவிடம் பெரும்பான்மை எண்ணிக்கையை கேட்கிறார், அதனை கொடுத்துவிட்டு ஆட்சியமைக்க வேண்டியது தானே. ஆட்சியமைப்பதற்கு முன்பாக பெரும்பான்மைக்கான ஆதரவு குறித்த பட்டியலை ஆளுநரிடம் வழங்குவது வழக்கமானதுதான்.
அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், பதவிப் பிரமாணம் செய்துவைத்து முதல் கூட்டத் தொடரிலேயே ஆட்சிக் கலைந்தால் ஆளுநர் தானே பொறுப்பு. எனவே அவரின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இண்டியா கூட்டணியை காங்கிரஸ் சிதைத்து வருகிறது.
திமுக சட்டமன்றக் குழு தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை. அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை எங்கள் கூட்டணியில் வைத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
‘தவெக அரசுக்கு இடையூறு இருக்காது’ - ஸ்டாலின்
முன்னதாக, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், “தமிழக மக்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜனநாயக முறைப்படி, அதிக இடங்களைப் பிடித்த கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் தவறில்லை. அவர்கள் ஆட்சி அமைப்பதை நாங்கள் தடுக்க மாட்டோம். புதிய அரசு அமைந்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்கள் எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதை உன்னிப்பாக கவனிப்போம். பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.
காலை உணவு, மகளிர் உரிமைத் தொகை உட்பட திமுக அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களை அவர்கள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்குவதாக விஜய் உறுதியளித்தது சாத்தியமில்லை. எங்களைப் போல, குறைந்தபட்சம் ரூ.1,000 வழங்குங்கள்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் போன்ற தவெகவின் வாக்குறுதிகளையும் செயல்படுத்த முடியாது. ஆனால், அவர்கள் செய்தால் மகிழ்ச்சி. முக்கியமாக, புதிய அரசு தங்கள் நிர்வாகத்தை தொடங்குவதற்கு போதிய அவகாசம் வேண்டும். எனவே, அடுத்த 6 மாதங்களுக்கு தவெக அரசுக்கு திமுக தரப்பில் இருந்து எந்த இடையூறும் இருக்காது. 6 மாதங்களுக்குப் பிறகு அரசின் செயல்பாடுகளைப் பொருத்து எங்கள் அடுத்தகட்ட முடிவுகளை எடுப்போம். அரசியலமைப்பு நெருக்கடி கொடுப்பதையோ, உடனடி தேர்தலையோ திமுக விரும்பவில்லை’ என்று அந்தப் பேட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.