சிவகாசி: பாஜக ஆணைப்படி திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைப்பதாக தகவல் வந்ததை அடுத்தே, தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததாக அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “எதிர்கட்சித் தலைவராக பொறுப்புடன் செயல்படவேண்டிய உதயநிதி பொறுப்பு இல்லாமல் பேசி உள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்துக் கொண்டு இளைஞரணி கூட்டத்தை கூட்டி காங்கிரசுக்கு எதிராக பேசி உள்ளார். அவரை துணை முதல்வராக தோளில் சுமந்தது காங்கிரஸ்.
பாஜக ஆணைப்படி அதிமுக, திமுக கூட்டணி அமைப்பதாக தகவல் வந்ததை அடுத்துதான் தவெக உடன் கூட்டணி அமைத்தோம். விஜய் முதல்வராக கூடாது என பாஜக நினைத்தது. மே 4- ம் தேதி மாலை பாஜக மூத்த தலைவர் பேசி அதிமுக, திமுக கூட்டணி அமைக்க கனெக்டிங் கால் போட்டுள்ளார்.
இதை அறிந்து தான் மே 5- ம் தேதி டெல்லியில் உயர்நிலை கூட்டத்தை கூட்டி, 6-ம் தேதி தவெக கூட்டணி என்ற முடிவை அறிவித்தோம்.
அதிமுக - திமுக கூட்டணிக்கு முயற்சி நடந்தது என்பதை சிபிஎம் பொதுச் செயலாளர் பேபி, விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் உறுதி செய்துள்ளனர். திமுக தனது பொய் நாடகங்களை நிறுத்த வேண்டும். திமுக, அதிமுகவுடன் சேர்ந்து வெகு விரைவாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும்.
திமுகவின் கொள்கைகளை உதயநிதி குழி தோண்டி புதைத்துக் கொண்டிருந்தார். அதிமுக உடன் கூட்டணி அமைக்க துள்ளி குதித்தவர் உதயநிதி. நாடாளுமன்றத்தில் தனியாக இடம் கேட்கும் திமுக மெல்ல பாஜக அருகில் சென்று விடும். 2029 பாராளுமன்ற தேர்தலை அதிமுக, திமுக, பாஜக இணைந்து சந்திக்கும்.
இந்த தேர்தலில் போதை பொருள், பெண்கள் பாதுகாப்பு முக்கிய பிரச்சினையாக இருந்தது. மகளிர் பாதுகாப்பு தான் முக்கியம் என முதல்வர் கூறி உள்ளார். இன்னும் அதிகாரிகளை கூட முழுமையாக மாற்றவில்லை. அரசுக்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும்.
இண்டியா கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. திமுக விலகி விட்டது, அதற்கு பதிலாக தவெக இணைந்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை நனவாகி உள்ளது. அமைச்சரவையில் இடம் பெற்றதன் மூலம் கூட்டணி மேலும் உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும். விரைவில் தவெக கூட்டணிக்கு பெயர் அறிவிக்கப்படும்.
பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டால் 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3 முறை உயர்ந்துள்ளது. இது மேலும் உயரும். பாஜகவை வீழ்த்த ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ அசோகன், வழக்கறிஞர் குப்பையாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.